ரெண்டே நிமிஷத்தில கதாநாயகன் ஆயிட்டம்ல.ரொம்ப நாளைக்கு முன்னால பஞ்சாபிலும், ஜம்மு காஷ்மீரிலும் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்திச்சு. சென்ட்ரல் கவர்மென்ட்டால எதுவுமே செய்ய முடியல. அப்படிப்பட்ட நேரத்துல நான் ஜம்மு போயிருந்தேன். ஜம்முல வேலைய முடிச்சிக்கிட்டு டெல்லி கிளம்ப பார்த்தா பஸ் ட்ரெயின் எல்லாம் பேக் ஆயிடுச்சி. அப்பால இன்னா பண்ணேன்ணு கேட்கிறீகளா? கவர்மென்டு பஸ் ஒண்ணுல ஏறி நின்னுக்கிட்டே டெல்லி போயிடலாம்னு தைரியமா ஏறிட்டேன். பஸ்ல முக்கால்வாசி பேர் உக்கார்ந்திருந்தாந்க. நான் காலியாக இருந்த ஒரு ஸீட்டுக்குப் பக்கத்தில என் பெட்டியை வச்சிட்டு டாய்லெட்டுக்குப் போய் வந்திடலாமேன்னு போனேன். நான் கீழே இறங்கினதுமே அந்தக் காலியாக இருந்த ஸீட்டில உட்கார ஒரு ஆள் வந்திருக்காரு.என்னோட பெட்டியை காண்பிச்சி இது யாருதுன்னு கேட்க மற்ற பயணிகள்லாம் எங்களோடது இல்லைன்னு சொல்லி இருக்காங்க. அந்த பயணி உடனே கொஞ்சமும் யோசிக்காம கீழே போய் போலீஸை கூட்டி வந்து இந்த பெட்டி அனாதையா கெடக்கு, உள்ள பாம் இருந்தா இருக்கும்னு சொல்ல, போலீஸ்காரர் பயந்து போய், நான் பாம்ஸ்குவாடுக்கு போன் பண்றேன்னு பஸ்ஸை விட்டு கீழே இறங்க, பஸ்ல இருந்த பயணிங்க அத்தனை பேரும் வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவுமா அவங்கவங்க பெட்டியை எடுத்துக்கிட்டு கீழே இறங்கி பஸ்ஸை விட்டு தூரமா போய் நின்னுக்கிட்டாங்க. டாய்லெட்டுக்குப் போய் விட்டு வந்த நான் பஸ் காலியாக இருக்கிறத பார்த்து திரு திருன்னு பாண்டியராஜனை மாறி முழிச்சிக்கிட்டு கூட்டமா நின்னுக்கிட்டு இருந்த பயணிகள் பக்கத்தில போய் ஒரு பெருசுகிட்ட பஸ் ஏன் காலியாயிடுச்சு ரிப்பேரா? வேற பஸ் வருதான்னு ஒண்ணும் தெரியாம கேட்க, அதுக்கு அந்தப் பெருசு பஸ்க்கு உள்ளே ஒரு அநாதைப் பொணம்.. சீச்சீ.. பெட்டி கிடக்கு. அதுல பாம் இருக்கு என்றார். எனக்கு பகீர் என்றது. உடனே நான் பெருசுகிட்ட அய்யய்யோ என் சூட்கேஸும் உள்ள தான் இருக்கு எடுத்துக்கிட்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டு ஓடிப் போய் பஸ்ஸுக்குள் ஏறி என் ஸூட்கேஸை எடுத்துக்கிட்டு இறங்கினதும் அத்தனை பேரும் இது உன்னோடதா என்று ஒன்றாக கூச்சல் போட்டனர். அதுக்குள்ள போலீஸ்காரரும் வந்து பெட்டிய தெறந்து காமின்னார். நானும் பெட்டிய தெறந்து காண்பிச்சு என்னோட விசிட்டிங் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எல்லாத்தையும் காண்பிச்சு டெல்லிக்கு அவசரம போகணும்னு சொன்னேன். அதுக்குள்ள பஸ் டிரைவர், கண்டக்டர் எல்லாம் வந்து காச் மூச்சுன்னு கத்தி பிறகு பயணிகள் எல்லோரும் பஸ்ல உட்கார்ந்தாங்க. ஸீட் கிடைக்காம நின்னுக்கிட்டு போகணுமேன்னு நினைச்சிக்கிட்டு இருந்த எனக்கு என் பெட்டியில் பாம் கீம் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சதும் பயணிகள் எல்லாரும் சந்தோஷப்பட்டு அந்தப் பெருசு தலைமையில கண்டக்டர் கிட்டே பேசி எனக்கு கண்டக்டர் ஸீட்டை வாங்கி கொடுத்து உட்காரச் சொன்னாங்க. எனக்கு ஸீட்டை குடுத்துட்டு பாவம் கண்டக்டர் நின்னுக்கிட்டே வந்தாரு. பயணிகளுக்கு நல்ல டைம் பாஸ் ஆனதுல நான் முழு பஸ்லேயும் கதாநாயகனா ஆயிட்டேன்ல. அப்புறமா மிட்வேயில நான் சாப்பிடும் போது கண்டக்டருக்கு என் காசுல சாப்பாடும் டீயும் வாங்கிக் கொடுத்தது தனிக்கதை.
பின் குறிப்பு :- இந்த போஸ்ட் அன்புடன் அருணாவின் ப்ளாக்க ரெகுலர படிச்சதன் பாதிப்புங்கோ. மனசுல உறங்கிக் கெடந்த சம்பவத்தை வார்த்தையருவியோ கொட்ட வச்சதுக்கு அருணாம்மாவுக்கு நன்றிங்கோ..